ஆவின் பால்பண்ணையில் எந்திரத்தில் சிக்கிய இளம்பெண் தலை துண்டாகி பலி

உமாராணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆவின் பால்பண்ணையில் எந்திரத்தில் சிக்கிய இளம்பெண் தலை துண்டாகி பலி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கிருந்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாள் ஒன்றுக்கு சுமார் 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கார்த்தியின் மனைவி உமாராணி(வயது30) ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு உமாராணி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.

பால் பாக்கெட்டுகள் தயாராகி வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் உமா ராணி இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த துப்பட்டாவும், அவரது தலை முடியும் அருகில் இருந்த எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது.

கண்இமைக்கும் நேரத்தில்அதில் இழுக்கப்பட்ட உமா ராணி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவரது தலை எந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டிலும், உடல் கீழே தரையிலும் விழுந்தது. இதனை கண்டு அருகில் நின்று கொண்டு இருந்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவல் அறிந்ததும் துணைப் போலீஸ் சூப்பிரண்டு கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியான உமா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான உமாராணியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் பொம்மியம்பட்டி கிராமம் ஆகும். இவரது கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com