ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில் 100 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து- 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
கறி விருந்து நடந்த போது எடுத்த படம்.
கறி விருந்து நடந்த போது எடுத்த படம்.
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி. இங்கு காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு ஆனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையாசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை நடந்தது. காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர். பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 250 மூடை அரிசியில் சாதம் தயாரானது.

இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் கலைந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவர்.

இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொர்க்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, குண்ணனம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.

ஜாதி மத வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக கறுப்பு நிறத்தில் உள்ள வெள்ளாடுகளை வளர்த்து நேர்த்திகடனாக செலுத்துவது வழக்கமாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com