கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பலி

கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விவசாயி பலி
Published on

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்துக்கு தற்போது மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டியதால் இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட வராகநதிக்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிலக்கடலை விவசாயம் செய்துள்ளார். நேற்று இரவு தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் முருகன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து ராஜதானி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரவு நேரமானதால் முருகனை மீட்க முடியவில்லை. இன்று காலை தடுப்பணையில் முருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com