9-ம் கட்ட அகழாய்வு பணிகள் மும்முரம்- கீழடியில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.
9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள்.
9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள்.
Published on

மதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது.

9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com