தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சசிகலா சுற்றுப்பயணம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சொக்கம்பட்டி ராஜா, ஜெகன் உள்ளிட்டவர்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சசிகலா சுற்றுப்பயணம்
Published on

தென்காசி:

அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சசிகலா வருகிற 17-ந்தேதி தனது சுற்றுப்பயணத்தை தென்காசி மாவட்டத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக 16-ந் தேதி இரவு 9 மணியளவில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் சசிகலா, மறுநாள் 17-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து உரையாட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தென்காசிக்கு 16-ந்தேதி வருகை தரும் சசிகலாவிற்கு இலத்தூர் விலக்கு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அவர் 21-ந்தேதி வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்திக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், அதற்கு தேவையான அனுமதியை பெறுவதற்காகவும் வக்கீல் பூசத்துரை தலைமையில், குத்துக்கல்வலசை செல்வம், சின்ன ஆணைக்குட்டி பாண்டியன், செந்தூர் பாண்டியன், ரமேஷ் பாண்டியன், சுந்தரராஜன், பண்பொழி பேரூர் உறுப்பினர் சுப்பையா கண்ணு, சுரேஷ், சொக்கம்பட்டி ராஜா, ஜெகன் உள்ளிட்டவர்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தேவையான பாதுகாப்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com