தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது

தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.பொய்யான தகவலை கூறி பணம் பறிக்க முயலும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுர ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது ஆதீனமாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி வினோத், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் உள்ளது. இதனை சமூக வலைத்தளங்கள், டி.வி சேனல்களில் வெளியிடாமல் இருக்க நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். ஏன் பொய்யான தகவல்களை கூறி பணம் பறிக்க ஆசைப்படுகிறீர்கள் என தட்டிக் கேட்டபோது, என் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவன தாளாளர் குடியரசு, திருவெண்காடு பா.ஜனதா நிர்வாகி விக்னேஷ், மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் தூண்டுதலாக உள்ளனர்.

எனவே பொய்யான தகவலை கூறி பணம் பறிக்க முயலும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக கூறி தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வினோத் ( வயது 32), குடியரசு (39 ) , விக்னேஷ் (33), நெய் குப்பத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ( 28 ) ஆகிய 4 கைது செய்தனர். பின்னர் அவர்களை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் அகோரம், அமிர்த விஜயகுமார், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com