

சென்னை:
சென்னையில் ஆன்லைன் மோசடிக் கும்பல் தொடர்ச்சியாக பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி வருகிறது.
நேற்று ஒரே நாளில் 3 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக மோசடிக் கும்பல் பணத்தை எடுத்துள்ளது. கொளத்தூரை சேர்ந்த கிரி பிரசாத் என்பவரிடம் பேசிய மோசடிக் கும்பல் அவரிடம் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை வாரி சுருட்டியுள்ளது.
ராஜமங்கலம் பகுதியில் ஆகாஷ் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.58 ஆயிரமும், அமைந்தகரை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் பணமும் அபேஸ் செய்யப்பட்டது. இவர்களிடம் பேசிய கும்பல் உலர் பழங்கள் விற்பனையில் ஈடுபடலாம் என கூறி ஏமாற்றியுள்ளது.
இது தொடர்பாக தனித் தனியாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் வடமாநிலங்களில் இருந்து நெட்வொர்க் அமைத்து அரங்கேற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.