கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

ராட்சத அலை மகேஷ் உள்பட 5 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய மகேசும், வருண்குமாரும் பிணமாக அதே பகுதியில் கரை ஒதுங்கினர்.
கடல் அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
Published on

சோழிங்கநல்லூர்:

வேளச்சேரியைச் சேர்ந்தவர் மகேஷ்(வயது28). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான வருண்குமார்(28) உள்பட 4 பேருடன் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பின்னர் நண்பர்கள் அனைவரும் அங்குள்ள கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை மகேஷ் உள்பட 5 பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் மகேஷ், வருண்குமார் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமானார்கள். மற்ற 3 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.

சிறிது நேரத்தில் கடலில் மூழ்கிய மகேசும், வருண்குமாரும் பிணமாக அதே பகுதியில் கரை ஒதுங்கினர். இதனை கண்டு அவரது நண்பர்கள் கதறி துடித்தனர். கடலில் மூழ்கியவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் மற்றும் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள கடற்கரையில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறித்தி உள்ளனர். இதனை மீறி கடலில் இறங்கிய நண்பர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர். நாளை காணும் பொங்கலையொட்டி வரும் பொதுமக்கள் கடல் பகுதியில் இறங்காமல் இருக்க கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com