அமர்நாத் பனிச்சரிவில் சிக்கிய 17 தமிழர்கள் ரெயில் மூலம் சென்னை வந்தனர்

பனிச்சரிவால் வர முடியாமல் சிக்கியவர்களை உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். கடந்த 13-ந்தேதி அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்தனர்.
அமர்நாத் பனிச்சரிவில் சிக்கிய 17 தமிழர்கள் ரெயில் மூலம் சென்னை வந்தனர்
Published on

சென்னை:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரையாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், முருகானந்தம் செல்வி, சாவித்திரி உள்பட 17 பேர் சென்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமர்நாத் அருகே ஏற்பட்ட பணிச்சரிவு காரணமாக, ஸ்ரீநகருக்கான பாதை முற்றிலும் சேதமடைந்து அங்கேயே அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் அப்பகுதியில் இருந்து வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமர்நாத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பனிச்சரிவால் வர முடியாமல் சிக்கியவர்களை உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து கடந்த 13-ந்தேதி அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்தனர்.

மேலும் 17 பேருக்கும் ரெயில் மூலம் சென்னை திரும்ப தமிழக அரசின் மூலம் டிக்கெட் எடுத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் ரெயில் மூலம் நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகள் வர வேற்றனர். பின்னர் 17 பேரையும் சொந்த ஊர்களுக்கு வழியனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com