search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2-ம் கட்டமாக கலைஞர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    2-ம் கட்டமாக கலைஞர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்திருந்த நிலையில் அதில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 242 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் பணம் செலுத்தப்பட்டு வந்தது. 56 லட்சம் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் இதில் நிராகரிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு அறிவித்து இருந்தது.

    அதன் பேரில் 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்களில் 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.

    அதன் பேரில் ஏற்கனவே ரூ.1000 வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருடன் சேர்த்து புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டது.

    அதன் பேரில் மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித்தொகையை தீபாவளி பண்டிகையையொட்டி முன்கூட்டியே இன்று வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவரவர் வங்கிக் கணக்கில் நேற்றே ரூ.1000 பணம் சென்றடைந்தது.

    இந்த திட்டத்தில் தற்போது புதிதாக இணைந்திருந்த 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகளுக்கு உரிமைத்தொகை விழா தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

    சென்னையில் இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிருக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    Next Story
    ×