search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரி மாவட்டம் வழியாக சென்றபோது காரை விட்டு இறங்கி தொண்டர்களை சந்தித்த ராகுல்காந்தி
    X

    நீலகிரி மாவட்டம் வழியாக சென்றபோது காரை விட்டு இறங்கி தொண்டர்களை சந்தித்த ராகுல்காந்தி

    • பந்தலூர் பகுதியிலும் அவரை வரவேற்க ஏராளமான குழந்தைகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கிறார்.

    ஊட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு பாராளுமன்ற தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, கண்ணூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் தனது தொகுதியான வயநாடு பகுதிக்கு சென்றார்.

    வயநாடு தொகுதிக்குட்பட்ட மலப்புரம் மாவட்டம் நிலம்பூர், எடக்கரா பகுதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    பின்னர் அவர் அங்கிருந்து காரில் தமிழக கேரள எல்லையான நாடுகாணி, சேரம்பாடி வழியாக வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு சென்றார்.

    முன்னதாக மாநில எல்லையான நாடுகாணி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோஷி பேபி, கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்திக்கு சால்வை அணிவித்தும், பூங்கொதது அளித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி தொண்டர்களுடனும் கைகுலுக்கினார். அப்போது தொண்டர்கள் சிலர் ராகுலுடன் போட்டி, போட்டு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர், கூடலூர் நிலபிரச்சினைக்கு தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என ராகுல்காந்தியிடம் முறையிட்டனர். அதனை கேட்டு கொண்ட ராகுல்காந்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதேபோல் பந்தலூர் பகுதியிலும் அவரை வரவேற்க ஏராளமான குழந்தைகள், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    அப்போது குழந்தைகள் ராகுல் ஜி, ராகுல் ஜி என சத்தமாக அழைத்தனர். இதை கேட்ட ராகுல்காந்தி காரை நிறுத்துமாறு கூறி விட்டு, காரை விட்டு கீழே இறங்கினார்.

    அவரை குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ராகுல்காந்தி குழந்தைகளுடன் கைகுலுக்கி புகைப்படமும் எடுத்து கொண்டார்.

    பின்னர் ராகுல்காந்தி, காரில் ஏறி கையை அசைத்தவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து அவர் இரவில் சுல்தான்பத்தேரியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அவர் தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவை தொடங்கி வைக்கிறார். வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    வயநாட்டில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நாளை கொச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    Next Story
    ×