லண்டனில் பென்னிகுக் சிலை திறப்பு தள்ளிவைப்பு

முல்லைப் பெரியாறு அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மறைவால் அந்நாட்டில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஜான் பென்னிகுக்
ஜான் பென்னிகுக்
Published on

உத்தமபாளையம்:

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை மூலம் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறுகிறது.

152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுக் கடந்த 1916ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி இறந்தார்.

இவரது கல்லறை லண்டனில் உள்ள புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்தில் உள்ளது. இங்குள்ள கேம்பர்லி பூங்காவில் தமிழக அரசு சார்பில் பென்னி குக் சிலை அமைக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழக அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் தேனி எம்.எல்.ஏ.க்கள் சரவணகுமார், மகாராஜன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றனர்.

தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மறைவால் அந்நாட்டில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பென்னி குக் சிலை திறப்பு விழா நாளை (11-ம் தேதி) நடைபெற உள்ளது என்று லண்டலன் வாழ் தமிழரும், சிலை அமைப்பு ஒருங்கிணைப்பாளருமான சந்தன பீர் ஒலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது லண்டனிலும் அது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பென்னி குக் சிலை திறப்பு விழா இன்றைக்கு பதிலாக நாளை எளிமையான முறையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com