என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாய்க்கால் வெட்டும் பணி 8-வது நாளாக நடைபெற்றது.
என்.எல்.சி. சுரங்கம்-2 விரிவாக்கம்: வாய்க்கால் வெட்டும் பணி 8-வது நாளாக நீடிப்பு
- நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறுக்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.
- முதலில் பகலில் மட்டுமே நடைபெற்று வந்த பணி தற்போது இரவு-பகலாக நடந்து வருகிறது.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது.
தற்போது நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்து நிலக்கரி வெட்டி எடுக்க என்.எல்.சி. முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சுரங்கம்-2-ல் இருந்து 60 மீட்டர் தூரத்தில் உள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஏனெனில் மழைக்காலங்களில் சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுவதை தடுக்கவும், சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறு அமைப்பது அவசியம் என்று என்.எல்.சி. கருதியது.
இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறுக்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டும் வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த விளைநிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி என்.எல்.சி. நிர்வாகம் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் பயிர்களை அழித்து புதிய பரவனாறுக்காக வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி என்.எல்.சி. அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அன்றைய தினம் மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் பணி தொடங்கியது. முதலில் பகலில் மட்டுமே நடைபெற்று வந்த பணி தற்போது இரவு-பகலாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று 8-வது நாளாக பணிகள் நடைபெறுகிறது. பணிகள் வேகமாக நடப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






