search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் 9-வது நாளாக நீடிப்பு: பா.ஜனதா எம்.பி.க்கு சம்மன் அனுப்ப டெல்லி போலீஸ் முடிவு
    X

    மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் 9-வது நாளாக நீடிப்பு: பா.ஜனதா எம்.பி.க்கு சம்மன் அனுப்ப டெல்லி போலீஸ் முடிவு

    • பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
    • விசாரணை தொடர்பான அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளார். பா.ஜனதா எம்.பி.யான அவர் 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பஜ்ரங்புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த நட்சத்திரங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் மற்ற விளையாட்டு பிரபலங்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்யாதது தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டிய 7 மல்யுத்த வீராங்கனைகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் அவர் மீது டெல்லி போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

    வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள் குடிநீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போராட்டம் இன்று 9-வது நாளாக நீடித்தது.

    இதற்கிடையே மல்யுத்த நட்சத்திரங்களின் போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

    இதே போல அவர் மீது குற்றம் சுமத்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் வாக்குமூலம் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் தான் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்றும் விசாரணையை எதிர் கொள்ள தயார் என்றும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    Next Story
    ×