

திருப்பதி:
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜி மாவட்டம் செஞ்சேரி கொண்டாவை சேர்ந்தவர் மேரி ஜோதி. நிறைமாத கர்ப்பிணியான இவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் மேரி ஜோதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று மதியம் மேரி ஜோதி ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் வந்தார். செல்லும் வழியில் மலையில் இருந்து வரும் ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஆட்டோ டிரைவர் ஓடையை கடக்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து உறவினர் ஒருவர் மேரிஜோதியை தோளில் அமர வைத்து சுமந்துபடி வெள்ளத்தை கடந்தார். மற்றொருவர் கை குழந்தையுடன் உயிரை கையில் பிடித்தபடி ஆபத்தான முறையில் ஓடையை கடந்து மறுகரைக்குச் சென்றனர்.
இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற அவல நிலைக்கு முடிவு கட்ட பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.