

பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தின் ராம்நகர் மாவட்டம் சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் தேவகவுடா தன் பேரன் நிகில் குமாரசாமியை வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் கர்நாடகாவில் ஒரு மோசமான ஆட்சியை காங்கிரஸ் நடத்தி வருகிறது.
இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியை நான் பார்த்ததே இல்லை. இந்த ஆட்சியை அகற்றும்வரை ஒயமாட்டேன்.
மேகதாது திட்டம் அமல்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். மாநில விவசாயிகளின் நலனுக்காக மேகதாது அணை கட்டுவது தான் உண்மையான சாதனை ஆகும்.
எனக்கு 92 வயதாகிறது. 62 ஆண்டு தீவிர அரசியலில் இருந்து வருகிறேன். என் கடைசி மூச்சு உள்ளவரை தீவிர அரசியலில் இருப்பேன்.
92 வயதான நான் 18 வயது போல் உற்சாகமாக செயல்படுகிறேன் என்றால் அதற்கு தொண்டர்களின் ஆதரவு தான் காரணமாகும் என தெரிவித்தார்.