

தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு உறுதியளித்ததை தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வாக்கில் மேடான்டா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அவரை சந்தித்து அரசின் உறுதிமொழிகளை தெரிவித்த பிறகு, அவர் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்தார்.
"மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லே-லடாக் 'அபெக்ஸ் பாடி' (Apex Body) அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், 26 நாட்களுக்குப் பிறகு நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டேன்," என்று வாங்சுக் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி 'எக்ஸ்' தளத்தில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது அன்றாட நடைமுறைகளை பின்பற்றி, விரைவில் தனது உடல் எடையை மீட்டெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சோனம் ஜி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்," என்றும் பிரதமர் கூறினார்.
மருத்துவமனையில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ மற்றும் பிறர் முன்னிலையில் அரசு அளித்த உறுதிமொழிகளை வாசித்துக்காட்டிய நட்டா, "டெல்லியின் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடுபவர்கள் மற்றும் ஜூலை 20, 2026 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாதது குறித்து அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது," என்று கூறினார்.
தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
"அதுமட்டுமின்றி, சமீபத்திய நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினருக்குப் பொருத்தமான இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது," என்று நட்டா மேலும் கூறினார்.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.
"பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன். அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தேர்வு முறைகேடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தலைமையிலான போராட்டம் ஜூன் 20 அன்று தொடங்கியது.
ஜூன் 28 அன்று போராட்டத்தில் இணைந்த வாங்சுக், அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது எந்தவிதத் தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அரசு உறுதியளித்து, போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாகக் கூறியிருந்தார்.