search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மிசோரம், சத்தீஸ்கரில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: மாவோயிஸ்டுகள் இன்றும் வெடிகுண்டு தாக்குதல்
    X

    மிசோரம், சத்தீஸ்கரில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: மாவோயிஸ்டுகள் இன்றும் வெடிகுண்டு தாக்குதல்

    • 2 தேர்தல் பணியாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தனர்.
    • 100 வாக்காளர்களுக்கு 3 போலீசார் என்ற வகையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந்தேதி தொடங்கி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ந்தேதி (இன்று) ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த இரு மாநிலங்களிலும் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை பிரசாரம் ஓய்ந்தது. நேற்று ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்பு நீண்ட வரிசையில் நிற்க தொடங்கிவிட்டார்கள். 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

    மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.57 லட்சம் பேர் வாக்கு உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக 40 தொகுதிகளிலும் 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த வாக்குச்சாவடிகளில் 30 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டு இருந்தன. சர்வதேச எல்லை பகுதி அருகே இருப்பதால் அந்த 30 வாக்குச்சாவடிகளிலும் நேற்றே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று காலை மிசோரம் மாநில மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சென்றதை காண முடிந்தது. மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 9 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பதிவின் போது வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிசோரம் மாநிலத்தை இணைக்கும் மற்ற மாநில எல்லைகள் அனைத்தும் இன்று காலை சீல் வைக்கப்பட்டன.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இன்று 20 தொகுதிகளுக்கும், வருகிற 17-ந்தேதி 70 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் மாவேயிஸ்டுகள் மிக மிக அதிகம் இருக்கும் தொகுதிகளாகும்.

    இதனால் இந்த 12 தொகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு இன்று மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக பஸ்தர் என்ற பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள 600 வாக்குச்சா வடிகளில் சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் சத்தீஸ்கரில் மட்டும் ஓட்டுப்பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு திட்ட மிட்டபடி 20 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவுக்கு முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக நாராயணப்பூர், தாந்தே வாடா, கோண்டா, மிஜப்பூர், காங்கேர் உள்பட 10 தொகுதி களில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கே ஓட்டுப்பதிவை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 10 தொகுதி களிலும் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கரில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டுகள் தாக்கியதில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். நேற்று மீண்டும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 தேர்தல் பணியாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள தொண்டமார்க் பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    இதனால் இன்று காலை பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களை தேர்வு செய்ய 40.78 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது.

    இவர்களுக்காக 5 ஆயிரத்து 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கரில் வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத் தப்படக்கூடாது என்பதற்காக பதட்டமான பகுதிகளில் மிக மிக அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு 3 போலீசார் என்ற வகையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். அங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும், எதிர்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாரதிய ஜனதா இடையே பலமுனை போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆளும் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன.

    அதுபோல சத்தீஸ்கரில் பூபேஸ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கு இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. அங்கு கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளன. இன்று மாலை இரு மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

    மற்ற மாநிலங்களில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் டிசம்பர் 3-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    Next Story
    ×