கர்நாடகாவில் வாஸ்து நிபுணர் படுகொலை- சிசிடிவியில் பதிவான இரண்டு பேர் கைது

ஓட்டல் வரவேற்பு பகுதியில் சந்திரசேகர் குருஜியை இரண்டு பேர் கத்தியால் மீண்டும் மீண்டும் குத்தினர்.கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
சந்திரசேகர் குருஜி (கோப்பு படம்)
சந்திரசேகர் குருஜி (கோப்பு படம்)
Published on

ஹுப்ளி:

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜியை ஹுப்ளியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரண்டு பேர் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்து தப்பி ஓடினர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சந்திரசேகரை வரவேற்பது போல் நடிக்கும் இரண்டு பேர், திடீரென அவரை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்திய காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார் இந்த கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மஞ்சுநாத் மாரேவாட் மற்றும் மஹந்தேஷ் சிரூர் ஆகியோரை பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க்கா பகுதியில் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் ஹூப்ளிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீஸ் கமிஷனர் லாபு ராம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பாகல்கோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் குருஜி மும்பையில் வசித்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது குடும்பத்தில் குழந்தை ஒன்று இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் ஹுப்ளி வந்திருந்தார்.

இந்நிலையில் சந்திரசேகர் குருஜியை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு கொடூரமான செயல் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com