லக்கிம்பூர் வன்முறை... கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை கண்டபடி திட்டிய மத்திய மந்திரி

மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா பத்திரிக்கையாளரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிகையாளரை திட்டிய மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா
பத்திரிகையாளரை திட்டிய மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா
Published on

லக்கிம்பூர்:

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில்  கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த விவசாயிகள் மீது மத்திய இணை மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர் நடந்த வன்முறையில் 4 பேர் இறந்தனர்.

இது தொடர்பாக அஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் உள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி அஜய் மிஷ்ரா பதவி  விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் அஜய் மிஸ்ரா நேற்று தன் மகனை சிறையில் சந்தித்துவிட்டு, இன்று லக்கிம்பூர் ஆக்ஸிஜன் ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது, அஜய் மிஸ்ராவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார்.  இதனால் கோபமடைந்த ஆஷிஷ் மிஸ்ரா, அந்த பத்திரிக்கையாளரை தள்ளிவிட்டு அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி வீசினார். மேலும் அவரை அவதூறான வார்த்தைகளால் கண்டபடி திட்டினார். பத்திரிகையாளரை அவர் அநாகரிகமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com