search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு: சமூக வலைத்தளத்தில் வைரல்
    X

    மணமக்களை ஒருவருக்கொருவர் தலையில் முட்ட வைத்ததையும், மணமகள் அழுவதையும் படத்தில் காணலாம்.

    மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு: சமூக வலைத்தளத்தில் வைரல்

    • உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
    • பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    பாலக்காடு :

    திருமண பந்தம் என்பது...

    மனித வாழ்க்கையின் புதிய அத்தியாயம்...

    இதுவே....ஒருமனமாய்...உலாவந்த மனங்களை இருமனமாய் இணைய வைக்கிறது. இணை பிரியாமல் வாழையடி வாழையாய்...வாழ்க்கையை வரலாறாக மாற்றுகிறது...

    ஆம்...திருமணத்தன்று...அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது வழக்கம். அம்மி மிதிப்பது என்பது ஒரு சடங்கு. மணமகன் என்பவர், மணமகளின் வலக்கால் கட்டை விரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைத்து, இந்த கல்லைப்போல் உறுதியாக மனம் கலங்காமல் இருக்க வேண்டும் என்பதே இதற்கான ஐதீகம்.

    சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாக திகழ்கின்றனர் என்பது ஐதீகம்...

    இதில்....வசிஷ்டர் என்கிற நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்கிற கருத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி.

    இந்த சடங்குகள் எல்லாம் ஐதீகம் என்கிற முறையில் நடைமுறையில் இருக்கின்றது...

    ஆனால் அம்மி...அருந்ததியை தாண்டி...இருமனங்களாய்... ஓட்டிக்கொண்ட தம்பதிகளுக்கு வினோத முறையில் ஒரு சடங்கு நடந்தது.

    ஆம்...புதுமண தம்பதிகள் இருவரது தலைகளையும் முட்ட வைக்கும் வினோத சடங்கு ஒன்று நடந்துள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பல்லசேனாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. பின்னர் உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு புகுந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக, மணமக்களை வாசல்படி அருகே நிற்குமாறு கூறினர். அப்போது உறவினர் ஒருவர் சச்சின், ஜலஷா இருவரது தலையை பிடித்து முட்ட வைத்தார். இதில் வலி தாங்க முடியாமல் மணமகள் அழுதார். அதன் பின்னர் மணமக்களை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.

    இவ்வாறு செய்வது புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என நம்புவதாகவும், அதனால் தான் மணமகளை அழ வைத்து வீட்டுக்குள் அனுப்புகிறோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கிராமத்தில் திருமணமான பின்னர் இதுபோன்ற வினோத சடங்கு இருப்பதாக வயதானவர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது எனக்கே தெரியாது என மணமகன் சச்சின் தெரிவித்தார்.

    முதன் முதலாக மணமகன் வீட்டுக்கு வரும் மணமகள் அழுதபடி வருவதால் குடும்பம் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    கேரளாவில் 98 சதவீதம் பேர் படித்தவர்கள். அப்படி இருக்க, 21-ம் நூற்றாண்டிலும் பழைய சம்பிரதாயம் தொடர்ந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார், மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×