கேரள இரட்டை சகோதரிகள் வாழ்வில் ருசிகரம்: ஒரே நாளில் திருமணம்.. ஒரே நாளில் பிரசவம்..

கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளுக்கு தாயான ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
சகோதரிகள் ஸ்ரீபிரியா, ஸ்ரீ லெட்சுமி ஆகியோர் பெற்ற குழந்தைகளுடன்.
சகோதரிகள் ஸ்ரீபிரியா, ஸ்ரீ லெட்சுமி ஆகியோர் பெற்ற குழந்தைகளுடன்.
Published on

திருவனந்தபுரம் :

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதியின் மகள்கள் ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர்.

இந்தநிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர். அதாவது கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி, ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த ஆஸ்பத்திரியிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினர். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் 'ஓ' பாசிட்டிவ் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com