

அரியானாவில் ஃபரிதாபாத் பகுதியில் போக்குவரத்து போலீசார் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் டிரைவரிடம் ஆவணங்களை கேட்டார். அப்போது, டிரைவர் மதுபோதையில் இருந்ததை அறிந்த போலீசார் அபராதம் விதிக்க முயன்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென டிரைவர் காரை இயக்கியதால், போக்குவரத்து போலீஸ் காரின் கதவில் தொங்கிய படியே சில மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார். இதைக்கண்ட மற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் காரை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "ஆவணங்களை சரிபார்ப்பதற்காக போலீசார், டிரைவரின் பக்கவாட்டில் உள்ள கதவு வழியாக கேட்டபோது, திடீரென டிரைவர் காரில் போக்குவரத்து போலீசை இழுத்து சென்றார். சில மீட்டர் தூரத்துக்கு சென்ற காரை மற்றவர்கள் மடக்கி பிடித்தனர்," என்றனர்.
மதுகுடித்து விட்டு காரை ஓட்டியது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.