

புதுடெல்லி:
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது.
நாடு முழுவதும் 290 நகரங்களிலும், அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளிலும் நடந்த இந்த தேர்வை 11 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். ஆங்கிலம், இந்தி மட்டுமில்லாது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டிருந்தது. அபுதாபி, ஹாங்காங் மற்றும் ஒஸ்லோ நகரங்களில் முதல்முறையாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்பட்டது.
இந்தநிலையில் ஜே.இ.இ, முதன்மை தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார். தேர்வு எழுதிய 11 லட்சம் மாணவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 23 மாணவர்கள் 300-க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். அவர்களில் முகுந்த் பிரதீசும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தவரிசையில் மாணவிகள் யாரும் இடம்பெறவில்லை. அதிகபட்சமாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
2-ம் கட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான விண்ணப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.