

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதில் பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இருந்தன.
இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது வலைதள பக்கத்தில், 2024 தேர்தலில் சிறந்த புகைப்படம் என்ற தலைப்புடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் முதல் முறையாக வாக்களித்த பின் கையில் மை வைக்கப்பட்ட விரலை உயர்த்தி காட்டும் காட்சி இருந்தது. புகைப்படத்துடன் அவரது பதிவில், இது என்னை பொறுத்தவரை 2024 தேர்தலில் சிறந்த புகைப்படம். கிரேட் நிக்கோபாரில் உள்ள ஷொம்பென் பழங்குடியினர் 7 பேரில் ஒருவர் முதல் முறையாக வாக்களித்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19-ந்தேதி அந்தமான் மற்றும் நிக்கோபாரில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் கிரேட் நிக்கோபார் தீவில் ஷாம்பென் ஹட் என்று பெயரிடப்பட்ட வாக்குச்சாவடி எண் 411-ல் பழங்குடியினர் 7 பேர் ஓட்டுபோட்டனர். அதில் ஒருவரது புகைப்படத்தை தான் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.