துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் 50 கோடி வரை விற்கப்படும் சூழல்- தமிழக முன்னாள் ஆளுநர் புகார்

தமிழக ஆளுநராக பதவி வகித்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது.
பன்வாரிலால் புரோகித் (கோப்பு படம்)
பன்வாரிலால் புரோகித் (கோப்பு படம்)
Published on

சண்டிகர்:

கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், தற்போது பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் லூதியானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் முற்றியுள்ளது.

இது குறித்து பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் 4 ஆண்டுகள் தமிழக ஆளுநராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்தது. தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி, 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை எனக்கு கடிதம் அனுப்பியது. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு பங்கு இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதில் மட்டும் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்?  மூன்று முறை தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் முழுநேர துணை வேந்தர் நியமனத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெறப்படவில்லை.

பஞ்சாப் மாநிலத்தின் வேளாண் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் தான். தலைமைச் செயலாளர் அல்ல. இந்த விவகாரத்தில் நான் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன். அந்தப் பணியை செய்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com