

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் வெளி நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்கள் உள்பட பலரும் பணியில் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத்திற்கு விமான சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.
இந்த நிலையில் விமான டிக்கெட் உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இவர்களது பயணம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலங்களாக உள்ளது. இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடல்சார் வாரிய தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால், கப்பல் சேவையை விரைவில் தொடங்க முடியும். இதற்கான டெண்டர் ஜனவரி மாதத்தில் கோரப்படும். தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம் என்றார்.
ஆயிரம் முதல் 2 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வகையில் கப்பல் இயக்க பரிசீலித்து வருவதாகவும், பயண நாட்கள் 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.