இளம்பெண்ணை ஏமாற்றிய ஆசிரியரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்து வைத்த உறவினர்கள்

தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அவினாஷ் அரசு ஆசிரியராக தன் பணியை தொடங்கினார். பெண்ணின் நெற்றியில் குங்கும திலகமிட மறுத்த அவினாஷை அடித்து உதைத்தனர்.
இளம்பெண்ணை ஏமாற்றிய ஆசிரியரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்து வைத்த உறவினர்கள்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் பகுசராய் நகரை சேர்ந்தவர் அவினாஷ். பட்டதாரி ஆன இவர் அந்த மாநிலத்தின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்தநிலையில் லகிசராய் நகரை சேர்ந்த குஞ்சம் என்பவர் பகுசராய் நகரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு கல்லூரி படிக்க வந்தார்.

அப்போது அவினாசை சந்தித்து பழகி வந்தார். நாளடைவில் இது காதலாக மாறியது. சுமார் 4 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அவினாஷ் குஞ்சத்தை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்தநிலையில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அவினாஷ் அரசு ஆசிரியராக தன் பணியை தொடங்கினார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவினாஷிடம் குஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு அவினாஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 கார்கள் அவினாசை வழிமறித்தன. பின்னர் அவரை காருக்குள் ஏற்றி கொண்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்றது.

அங்கே தனது உறவினர்களுடன் மணக்கோலத்தில் இருந்த குஞ்சத்தை பார்த்து அவினாஷ் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவினாஷின் கால்களை கயிற்றால் கட்டிய உறவினர்கள் துப்பாக்கி முனையில் குஞ்சத்துடன் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

அப்போது பெண்ணின் நெற்றியில் குங்கும திலகமிட மறுத்த அவினாஷை அடித்து உதைத்தனர். அருகே இருந்த குஞ்சம் அழுது துடித்தார். சினிமா காட்சிகளை மிஞ்சிய இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தநிலையில் திருமணம் முடிந்த கையோடு அவினாஷ் வீட்டிற்கு சென்ற குஞ்சத்தை மணமகனின் பெற்றோர் ஏற்க மறுத்து துரத்தி அடித்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளநிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com