

புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
வருகிற 28-ந்தேதி வரை அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன் என்று பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர் கூறி உள்ளார்.
திகார் சிறையில் உள்ள அவர் டெல்லி கோர்ட்டில ஆஜர்படுத்தப்பட்டபோது இதை தெரிவித்தார். இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குழுவுக்கு எதிராக அப்ரூவராக (அரசு தரப்பு சாட்சி) மாற போகிறேன். அவர்களின் முறைகேடுகள் குறித்த தகவலை வெளிப்படுத்துவேன்.
அவர்களுக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து உள்ளேன். உண்மை வென்றுள்ளது. திகார் சிறைக்கு கெஜ்ரிவாலை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.