search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடிகை ஜாக்குலின் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவேன்- சுகேஷ்  கடிதம்
    X

    நடிகை ஜாக்குலின் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவேன்- சுகேஷ் கடிதம்

    • சுகேஷ் சிறையில் இருந்து கொண்டே, ஜாக்குலின் பெர்னான்டசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
    • உண்மையை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.200 கோடி மோசடியாக பெற்றதாக மீண்டும் கைதானார்.

    இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகரும், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    ஆனால், சுகேஷ் சந்திரசேகருடன் காதல் இல்லை என்று ஜாக்குலின் மறுத்து வந்தார். இந்நிலையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இரானியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தன்னை பற்றிய எந்த தகவலையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என்று இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு தடை விதிக்குமாறு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'சுகேஷ் சந்திரசேகர் என்னை பற்றி மேலும் கடிதங்கள், அறிக்கைகள் அல்லது செய்திகளை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிடவேண்டும்' என்று கூறியிருந்தார். அத்துடன், ஜாக்குலின், பாட்டியாலா கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே, ஜாக்குலின் பெர்னான்டசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    உண்மையை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும். என் கனவில் கூட இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது இதயம் எப்பொழுதோ நொறுங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையை உணர்வது மிகவும் முக்கியமானது. உன்னுடைய செயலால் அதிர்ச்சி அடைகிறேன்.

    உன்னுடைய நடவடிக்கை என்னை பிசாசாக மாற்றியுள்ளது. உண்மையை அம்பலப்படுத்துவதை தவிர வேறு எனக்கு வழியில்லை. உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது. இப்போது உலகம் உண்மையை அறியவேண்டிய நேரம் வந்துவிட்டது. உண்மையை சட்டப்படி நான் வெளியே சொல்வேன். உன்னை பாதுகாக்க இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆதாரங்களையும் கோர்ட்டு மற்றும் விசாரணை அமைப்புகள் முன்பு சமர்ப்பிப்பேன்.

    இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

    அதன்மூலம் நடிகை ஜாக்குலினுடன் செல்போனில் நடத்திய சாட்கள், ஸ்கிரீன்ஷாட், குரல் பதிவுகள், வெளிநாடு நிதி வர்த்தக பரிவர்த்தனை, முதலீடு ஆகியவற்றையும் வெளியே சொல்வதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தில் நடிகை ஜாக்குலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் ஜாக்குலினை தான் குறிப்பிட்டு அதில் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    Next Story
    ×