search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் காரை ஏற்றி மாணவனை கொலை செய்த உறவினர்
    X

    கேரளாவில் காரை ஏற்றி மாணவனை கொலை செய்த உறவினர்

    • கார், சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஆதிசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பூவாச்சல் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி தீபா. இவர்களது மகன் ஆதிசேகர் (வயது 15). இவன் கட்டக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 30-ந்தேதி ஆதிசேகர், அந்தப்பகுதியில் சைக்கிளில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆதிசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஆதிசேகரின் பெற்றோர், போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் தங்கள் மகன் விபத்தில் சாகவில்லை. அவனது சாவில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் ஆதிசேகர் சென்ற சைக்கிள் மீது கார் மோதும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அந்த கார், வேண்டும் என்றே மோதுவது போல் இருந்தது.

    இதனால் போலீசார், கார் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஆதிசேகர் மீது திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    சிறுவனின் உறவினரான பூவாசலை சேர்ந்த பிரியரஞ்சன் என்பவர் தான் இந்த கொலை செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியரஞ்சன், கோவில் அருகே அமர்ந்து மது அருந்தியதாகவும் கோவில் சுவற்றில் சிறுநீர் கழித்ததாகவும் அதனை பார்த்த சிறுவன் ஆதிசேகர் மற்றவர்களிடம் கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பிரியரஞ்சனை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×