

புதுடெல்லி:
பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் லோக்தந்திரிக் ஜனதாதளம் நேற்று இணைந்தது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள சரத்யாதவ் இல்லத்தில் நடந்தது.
லாலுவின் மகனும், பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், லாலுவின் மகள் மிசா பாரதி, மாநிலங்களவை எம்.பி. மனோஜ் ஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் சரத்யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு இப்போது இருக்கும் சூழ்நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேருவது அவசியம். ஒன்று சேராவிட்டால் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு இந்த இணைப்பு முதல்படியாக இருக்கும்.
முதலில் எதிர்க்கட்சிகள் இணையட்டும். அதன்பிறகு பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்த சரத்யாதவ், கடந்த 2018-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி லோக்தந்திரிக் ஜனதாதளத்தை தொடங்கினார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதாதள டிக்கெட்டில் போட்டியிட்டு சரத்யாதவ் தோல்வி அடைந்தார்.
அவரது லோக்தந்திரிக் ஜனதாதளம், எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரம் பெறாத கட்சியாக உள்ளது.