ராக்கிங் செய்த மாணவர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட கேரள ஐகோர்ட்டு

என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சமூக சேவை செய்ய கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
கேரள ஐகோர்ட்
கேரள ஐகோர்ட்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 2 பேரை மூத்த மாணவர்கள் 5 பேர் ராகிங் செய்ததாக புகார் எழுந்தது.

இதில் முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் 5 பேரும் கொடூரமாக தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மூத்த மாணவர்கள் 5 பேரும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு மீதான விசாரணையின்போது வழக்கை ரத்து செய்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த பிரமாண பத்திரமும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும், கொல்லம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் 14 நாட்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை மாவட்ட சட்டசேவை ஆணையம் மேற்பார்வை செய்ய வேண்டும், இதற்காக 5 மாணவர்களும் வருகிற 21-ந் தேதி மாவட்ட சட்டசேவை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் எனவும் கோர்ட்டு கூறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com