

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பலரோமூட்டில் பகுதியை சேர்ந்தவர் அனிருதன் (வயது63).இவரது மனைவி அஜிதா (51). இவர்களின் மகள் ஜெனட். இவர் பரியாரம் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.
ஜெனட்டு அவரது நெருங்கிய உறவினரான ஸ்வரூப் என்பரை காதலித்து வந்தார். இதற்கு ஜெனட்டின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காதலை கைவிடுமாறு எச்சரித்தனர்.ஆனால் ஜெனட் அதை கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவரை பல்வேறு வகையில் மிரட்டினர்.
இந்த நிலையில் ஜெனட் காதலன் ஸவரூப்பை பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வந்தார். அவரது கணவர் ஸ்வரூப் வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்று விட்டார்.
சமீபத்தில்தான் மகள், காதலன் ஸ்வருப்பை பதிவு திருமணம் செய்து கொண்டது தந்தை அனிருதன் மற்றும் தாய் அஜிதாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து மகளுக்கு பதிவு திருமணம் செய்து வைத்தது யார்? என அவர்கள் விசாரித்தனர். இதில் உறவினர் ரினீஸ் என்பவர் மகளுக்கும், அவரது காதலனுக்கும் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரினீசை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக கூலிப்படையை சேர்ந்த கும்பலுக்கு ரூ. 2.5 லட்சம் முன்பணம் கொடுத்து உள்ளனர்.
இதையடுத்து கடந்த 11-ந்தேதி வீட்டில் இருந்த ரினீசை கூலிப்படையினர் கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது தொடர்பாக கோழிக்கோடு போலீசார் இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் கூலிப்படை கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கூலிப்படையை ஏவி உறவினரை கொல்ல முயன்றதாக இளம்பெண்ணின் பெற்றோரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று செம்பன்சேரி பகுதியில் பதுங்கி இருந்த கூலிப்படை கும்பலை சேர்ந்த சுபாஷ் பென்னி (38) அருண் (27), அஸ்வந்த் (22)அவினாஷ் (21), பாலு பிரனவ் ( 28) ஆகியோரையும் கைது செய்தனர்.