பத்மநாப சுவாமி கோவிலுக்கு வட்டியில்லாமல் ரூ.2 கோடி கடன்

கோவிலின் கோரிக்கையை அரசு பரிசீலித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பத்மநாப சுவாமி கோவிலுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது.
பத்மநாப சுவாமி கோவில்
பத்மநாப சுவாமி கோவில்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் விலை மதிப்பற்ற வைர, வைடூரிய நகைகள் உள்ளது. கோவிலின் ரகசிய அறைகளை திறந்து அதிகாரிகள் சோதனை செய்தபோது இவை கண்டுபிடிக்கப்பட்டது.

முன்பு இக்கோவிலின் நிர்வாகத்தை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வந்தனர். தற்போது கோவிலின் நிர்வாகத்தை கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கோவிலின் நகைகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் கோர்ட்டு கட்டுப்பாட்டில் இருப்பதால் கோவில் ஊழியர்கள் மற்றும் அன்றாட செலவுகளுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

எனவே கோவில் நிர்வாக செலவுக்கு பணம் தேவைப்படுவதால் கோவிலுக்கு கடன் வழங்க வேண்டும் என இதன் நிர்வாக அதிகாரி கடந்த ஆண்டு மே மாதம் அரசுக்கு கடிதம் எழுதினார்.

அரசுக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக கோவிலுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.எனவே திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் நிர்வாக செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறது.

இதற்கு வட்டியில்லாமல் ரூ. 2 கோடி நிதி ஒதுக்க வேண்டும் எனக்கோரியிருந்தார். இக்கடிதம் அரசின் பரிசீலனையில் இருந்தது.

தற்போது கோவிலின் கோரிக்கையை அரசு பரிசீலித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பத்மநாப சுவாமி கோவிலுக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது.

இந்த கடன் தொகையை ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தவேண்டும் எனவும் கேரள நிதி துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com