search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண்ணின் தந்தையை அடித்து கொன்ற முன்னாள் காதலன்
    X

    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண்ணின் தந்தையை அடித்து கொன்ற முன்னாள் காதலன்

    • ஸ்ரீலட்சுமியின் தந்தை, மகளை ஜிஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஜிஷ்ணு உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 63). இவரது மகள் ஸ்ரீலட்சுமி.

    ஸ்ரீலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதில் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலட்சுமியை ஜிஷ்ணு காதலிக்க தொடங்கினார். மேலும் அவர் ஸ்ரீலட்சுமியின் தந்தை ராஜூவிடம் சென்று அவரை தனக்கு திருமணம் செய்து தர கேட்டார்.

    ஆனால் ஸ்ரீலட்சுமியின் தந்தை, மகளை ஜிஷ்ணுவுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். மேலும் அவசரமாக ஸ்ரீலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். இவர்களின் திருமணம் இன்று நடக்க இருந்தது.

    இந்த தகவல் அறிந்து ஜிஷ்ணு ஆத்திரம் அடைந்தார். இன்று அதிகாலையில் அவர், தனது நண்பர்கள் சிலருடன் ஸ்ரீலட்சுமி வீட்டுக்கு சென்றார். அங்கு ஸ்ரீலட்சுமியும், அவரது தந்தையும் இருந்தனர். அவர்களை ஜிஷ்ணுவும், அவரது நண்பர்களும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த ராஜூ, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே ஜிஷ்ணுவும், அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதற்கிடையே ராஜூவின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ராஜூவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே ராஜூ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கல்லம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ஜிஷ்ணு உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ஸ்ரீலட்சுமிக்கு இன்று காலை 10.30 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அவரது கண்முன்பு தந்தையை முன்னாள் காதலன் ஜிஷ்ணு கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×