ஆந்திராவில் கடன் தொல்லையால் முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு வியாபாரி தற்கொலை

பைனான்சியர் மேலும் பணத்தைக் கேட்டு வர்மாவுக்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். பைனான்சியர் வர்மாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை மிரட்டி விட்டு சென்றார். இதனால் வர்மா மனமுடைந்தார்.
ஆந்திராவில் கடன் தொல்லையால் முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு வியாபாரி தற்கொலை
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் வர்மா (வயது 40) வியாபாரி. இவர் குண்டூரை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பைனான்சியர் மேலும் பணத்தைக் கேட்டு வர்மாவுக்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வர்மா அவரது போனை எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் பைனான்சியர் வர்மாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை மிரட்டி விட்டு சென்றார். இதனால் வர்மா மனமுடைந்தார்.

நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்ற வர்மா அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜன்னலை திறந்து பார்த்தபோது மின்விசிறியில் வர்மா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து வர்மாவின் பிணத்தை மீட்டனர்.

இது குறித்து குண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அறையை போலீசார் சோதனை செய்தபோது ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வர்மா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில் தான் வியாபாரத்திற்கு வாங்கிய கடனை முழுவதுமாக செலுத்தி விட்டேன்.

இருப்பினும் பைனான்சியர் மேலும் பணத்தை கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதி இருந்தார்.

இதுகுறித்து குண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பைனான்சியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com