ஹேமமாலினி கன்னத்துடன் சாலையை ஒப்பிட்டு பேசிய சிவசேனா மந்திரியால் சர்ச்சை

ஹேமமாலினி கன்னத்துடன் சாலையை ஒப்பிட்டு பேசிய சிவசேனா மந்திரியின் பேச்சுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி சகான்கர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஹேமமாலினி
ஹேமமாலினி
Published on

மும்பை:

மகாராஷ்டிர மாநில குடிநீர் வினியோக துறை மந்திரியாக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். சிவசேனா கட்சியை சேர்ந்த இவர், ஜல்காவ் புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இந்தநிலையில் இவர் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நடிகையும், பா.ஜனதா எம்.பி. யுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இவர் ஜல்காவ் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “எனது அரசியல் போட்டியாளர்கள் எனது தொகுதியின் சாலை தரத்தை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஹேமமாலினியின் கன்னம் (அவர் தொகுதி சாலைகள்) பிடிக்கவில்லையென்றால் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்” என்றார்.

இந்தநிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி சகான்கர் சிவசேனா மந்திரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் மந்திரி குலாப்ராவ் பாட்டீல் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com