search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளா குண்டு வெடிப்பில் பலி 3 ஆக உயர்வு: சரண் அடைந்தவரிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
    X

    கேரளா குண்டு வெடிப்பில் பலி 3 ஆக உயர்வு: சரண் அடைந்தவரிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

    • டோமினிக் மார்ட்டின் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி உள்ளார்.
    • ஜாம்ரா சர்வதேச அரங்கில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகவேகமாக வெளியேறியது.

    கொச்சி:

    கேரள மாநிலம் கொச்சி அருகே ஜாம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கம் உள்ளது.

    அந்த மாநாட்டு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் யெகோவாவின் சாட்சிகள் என்னும் கிறிஸ்தவ மத பிரிவின் 3 நாள் பிரார்த்தனை கூட்டம் நடந்து வந்தது.

    இறுதி நாளான நேற்று காலை பிரார்த்தனை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். மாநாட்டு அரங்குக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த நிலையில் வெளியிலும் சுமார் ஆயிரம் பேர் இருந்தனர். பிரார்த்தனை தொடங்கிய சிறிது நேரத்தில் அரங்கின் மையப்பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.

    அதில் ஏராளமானோர் காயமடைந்து அலறினார்கள். அடுத்த சில நிமிடங்களில் அரங்கின் இரு பக்கங்களிலும் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

    மாநாட்டு அரங்கில் குண்டு வெடித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு பெண் நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து இருந்தது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கேரள குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. 50-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

    அவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை காப்பாற்ற கூடுதல் டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க நிபுணர்களை கொண்ட போலீஸ் சிறப்பு குழுவை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அவர்கள் விசாரணை தொடங்கிய நிலையில் டோமினிக் மார்ட்டின் என்பவர் தாமாக முன் வந்து போலீசில் சரணடைந்து உள்ளார்.

    கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் குண்டுகள் வைத்தது நான் தான் என்று அவர் பொறுப்பேற்று இருக்கிறார். போலீசாரிடம் நேற்று அவர் பரபரப்பு வாக்குமூலமும் அளித்து உள்ளார். அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே டோமினிக் மார்ட்டினிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சிறப்பு குழு அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் கொச்சியில் சில இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    டோமினிக் மார்ட்டின் கொச்சியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி உள்ளார். அந்த இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை முடிந்த நிலையில் என்.எஸ்.ஜி. அதிகாரிகள் இன்று டோமினிக் மார்ட்டினிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கொச்சியில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அது பற்றிய தகவல்களை வெளியிட என்.ஐ.ஏ. அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    சரணடைந்த டோமினிக் மார்ட்டினுக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று விசாரணை குழுவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கிறிஸ்தவ ஜெப கூட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 2 பேரை கேரள போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் யார்? என்ற விவரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். அவர்கள் இருவரும் திருச்சூர் போலீஸ் அகாடமியில் பலத்த பாதுகாப்புடன் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    விசாரணை முடிந்த பிறகு இறுதி தகவல்களை வெளியிடுவோம் என்று கேரள மாநில போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான மர்மம் நீடித்தபடி உள்ளது.

    ஜாம்ரா சர்வதேச அரங்கில் குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த வளாகத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகவேகமாக வெளியேறியது. அந்த காரில் சென்றவர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது. அவர்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அந்த நீல நிற காரின் பதிவு எண்ணை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த கார் எண் போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த நீல நிற கார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

    அந்த காரில் தான் டிபன் பாக்சில் ஐஇடி வெடிகுண்டுகள் எடுத்துக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த வெடிகுண்டுகளை டோமினிக் மார்ட்டினிடம் கொடுத்த பிறகு காரில் வந்தவர்கள் வேகமாக தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் பினராயி விஜயன் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    Next Story
    ×