search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் லிவ்-இன் முறையில் குடித்தனம்: திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கழுத்தை நெரித்து கொன்ற காதலன்
    X

    கைது செய்யப்பட்ட பாருலை போலீசார் அழைத்து சென்ற காட்சி.

    டெல்லியில் 'லிவ்-இன்' முறையில் குடித்தனம்: திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கழுத்தை நெரித்து கொன்ற காதலன்

    • கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினித்தின் தங்கை பாருல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவான வினித் மற்றும் நண்பரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் சமீபகாலமாக திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவ்-இன் ரிலேசன்ஷிப்'-பில் இளம் ஜோடியினர் வாழ்ந்து வருவது அதிகரித்து வருகிறது.

    இதில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்படும் போது கொலையில் முடிந்து விடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

    கடந்த 12-ந் தேதி வடகிழக்கு டெல்லியில் உள்ள கரவால் நகர் பகுதியில் ஒரு பள்ளி அருகே அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் உத்தரகாண்ட் மாநிலம் மிராஜ் பூரை சேர்ந்த ரோகினா நாஸ் என்ற மஹி (வயது 25) என்பது தெரியவந்தது.

    இவர் கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு டெல்லியை சேர்ந்த வினித் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவ்-இன்' ரிலேசன்ஷிப்பில் இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வினித்தை தேடி சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வினித், அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரோகினா உடலை எடுத்து சென்று சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் குப்பை கொட்டும் இடத்தில் வீசி செல்வது தெரியவந்தது.

    இதனால் வினித்தான் ரோகினாவை கொலை செய்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த போலீசார் அவரையும், அவரது நண்பரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினித்தின் தங்கை பாருல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வினித் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. அந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவருக்கு ரோகினாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் 'லிவ்-இன்' முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ரோகினா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வினித்திடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு வினித்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வினித்-ரோகினா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ரோகினாவை தீர்த்துக்கட்ட வினித் முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று காதலர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் வினித், ரோகினாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை மறைப்பதற்காக தனது நண்பர் மற்றும் தங்கை பாருல் ஆகியோர் உதவியை நாடி உள்ளார். அவர்களும் உதவி செய்தது பாருலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

    ரோகினாவை வினித் கொலை செய்த பிறகு ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றுவதற்கு பாருல் உதவி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் கொலைக்கு பின்னர் தாங்கள் தங்கியிருந்த வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு வீட்டிற்கு வாடகைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

    தலைமறைவான வினித் மற்றும் நண்பரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×