search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிருடன் திரும்பி வந்தார்- உறவினர்கள் அதிர்ச்சி
    X

    கேரளாவில் இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிருடன் திரும்பி வந்தார்- உறவினர்கள் அதிர்ச்சி

    • கடந்த 14-ந்தேதி அங்கமாலி பகுதியில் சாலையோர நடைபாதையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • அந்தோணி என்று நினைத்து புதைக்கப்பட்டது யார்? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் ஆலுவா சுணங்கம்வெளி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது68). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் பெரும்பாலும் குடும்பத்தினருடன் வீட்டில் இருப்பதில்லை.

    மாறாக சாலையோரத்தில் உள்ள பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்திருக்கிறார். எப்போதாவது வீட்டுக்கு சென்று வந்தபடி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி அங்கமாலி பகுதியில் சாலையோர நடைபாதையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    அந்த முதியவரின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர் யார்? என்று விசாரணை நடத்தினர். ரோட்டோரத்தில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் ஆந்தோணியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்த முதியவரின் உடலை பார்த்தனர்.

    மேலும் அந்த முதியவர் அந்தோணி என்று அடையாளம் காட்டினர். இதையடுத்து அந்த முதியவரின் உடலை அந்தோணியின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த உடலை பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்குகளை செய்தனர். பின்பு ஆலுவாலில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லறை தோட்டத்தில் முதியவரின் உடலை புதைத்தனர்.

    முதயவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அந்தோணியின் குடும்பத்தினர் மற்றும் உளவினர்கள் 7-ம் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் அந்தோணி ஆலுவா சுணங்கம்வெளிக்கு வந்தார். இறந்ததாக கருதப்பட்ட அண்தோணி தங்களின் முன்பு உயிருடன் வந்ததை பார்த்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்படியென்றால் அந்தோணி என்று நினைத்து புதைக்கப்பட்டது யார்? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. இறந்ததாக கருதப்பட்ட அந்தோணி உயிரோடு வந்திருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இறந்தது அந்தோணி இல்லை என்பதும், வேறு நபரின் உடலை அந்தோணி என்று நினைத்து வழங்கியதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தோணி என்று புதைக்கப்பட்ட முதியவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×