

தெற்கு டெல்லியை சேர்ந்த மாணவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு மூன்று பேர் மாணவருடன் நட்பாக பழகி வந்துள்ளனர்.
அப்போது அக்டோபர் 23-ம் தேதி அன்று நாசுக்காக பேசிய நபர்கள் மாணவரை கடத்தி அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் நிர்வாண வீடியோ எடுத்துள்ளனர். மேலும், மாணவர் கஞ்சா, கைத்துப்பாக்கி போன்ற பொருட்களுடன் இருப்பது போன்றும் வீடியோ எடுத்து ரூ.20 லட்சம் தரவில்லை என்றால் வீடியோவை காண்பித்து பொய் வழக்கில் சிக்க வைத்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதனால் மாணவரின் குடும்பத்தினர் நபர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனாலும், மீண்டும் பணம் கேட்டு மிரட்டி மாணவரின் வீடியோவை அவரது உறவினர்கள், நண்பர்களின் எண்களுக்கு பரப்பிவிட்டுள்ளனர்.
மேலும், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று பணம் கொடுக்காவிட்டால் மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து, மாணவரின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால், அங்குள்ள போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாணவரை மீண்டும் மிரட்டியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான இரண்டு பேரை தேடி வருவதுடன், கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.