search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்

    • மேவார் புயலின் சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான பருவக் காற்று ஓட்டத்தை தடுக்கும்.
    • புயல் வலுவடையும் போது அது தென்சீனக்கடல் பகுதிக்குள் நுழையக்கூடும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும்.

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாக பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்ப மழைக்கான அறிகுறிகள் தென்பட்டு வந்தன.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மேலும் தாமதமாக கூடும் என தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமேட் கூறியுள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் துணை தலைவர் மகேஷ் பலாவத் கூறியதாவது:-

    பசிபிக் பெருங்கடலில் மேவார் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வருகிற 27 அல்லது 28-ந் தேதி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஏற்படும் தாக்கம் காரணமாக அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேவார் புயலின் சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான பருவக் காற்று ஓட்டத்தை தடுக்கும். புயல் வலுவடையும் போது அது தென்சீனக்கடல் பகுதிக்குள் நுழையக்கூடும். இந்த புயலால் ஏற்படும் பாதிப்பு காரணமாக காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும். இதன் காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான மேகங்களை வடகிழக்கு திசை நோக்கி தள்ளும். இதன்காரணமாக இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தனியார் வானிலை ஆய்வு மையத்தின் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. இவை அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளன. அறிவியல் மாதிரிகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நாங்கள் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை, என கூறியுள்ளது.

    இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு அதாவது 96 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் ஸ்கைமேட் தனியார் வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக அதாவது 94 சதவீதம் அளவுக்கே பெய்யும் எனக்கூறியுள்ளது.

    Next Story
    ×