

புதுடெல்லி:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு சட்டசபையில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் சட்ட மசோதா நிறை வேற்றப்பட்டது.
பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்காக அந்த மசோதா தமிழக கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக கவர்னராக ஆர்.என். ரவி பதவி ஏற்றார். ஆனாலும் அந்த சட்ட மசோதா ஜனாதி பதியின் அலுவலகத்துக்கு அனுப்பப்படாமல் இருந்து வந்தது. அதை உடனே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் தமிழக அரசின் நீட் விலக்கு கோரும் மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார்.
தமிழக அரசின் நீட் விலக்கு கோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை அறிந்த தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று மாலை பாராளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்ற மேல்-சபை கூட்டம் இன்று காலை கூடியது. அவை தலைவர் வெங்கையா நாயுடு “ஜீரோஅவர்” என்று சொல்லப்படும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதற்கான நேரத்தில் யாரெல்லாம் பேச பெயர் கொடுத்து இருந்தார்களோ அவர்களை பேசும்படி அழைத்தார்.
இதற்கிடையே தி.மு.க.வைச் சேர்ந்த மேல்-சபை எம்.பி.க்களும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் நீட் விவகாரத்தில் தமிழக கவர்னர் எடுத்துள்ள முடிவு குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதற்கு அவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, எம்.சண்முகம், வில்சன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
அப்போது அவை தலைவர் வெங்கையா நாயுடு, “ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் போது இந்த விஷயங்கள் குறித்து பேசலாம்” என்று கூறினார். ஆனால் அதை தி.மு.க. எம்.பி.க்கள் நிராகரித்தனர்.
உடனடியாக இந்த அவசர விவகாரம் குறித்து பேச வேண்டும். தமிழக கவர்னர் எடுத்த முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது. நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது தவறு என்று கண்டனம் தெரிவித்து தொடர் முழக்கம் எழுப்பினார்கள்.
அதற்கு அவை தலைவர் வெங்கையா நாயுடு, “இது தொடர்பாக 11.30 மணி அல்லது 12.30 மணிக்கு பேசலாம்” என்று கூறி ஜீரோஅவரில் பேசுவதற் காக பெயர் கொடுத்து இருந் தவர்களை பேச அழைத்தார்.
மேல்-சபை அலுவல் படியே செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஜீரோஅவரில் பேச பெயர் கொடுத்த எம்.பி.க்கள் ஒவ்வொருவராக பேச தொடங்கினார்கள்.
இதனால் தி.மு.க. எம்.பி.க்கள் மேல்சபையில் நின்றபடியே கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது கோரிக்கையை அவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்காததால் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து மேல்-சபையில் மற்ற எம்.பி.க்கள் ஒவ் வொருவராக பேசினார்கள்.
இதையும் படியுங்கள்... பெகாசஸ் சர்ச்சை - எந்த தகவலும் இல்லை என்கிறது வெளியுறவு அமைச்சகம்