ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் மரணம்: தோப்புக்கரணம் போடும்போது மயங்கி விழுந்தான்

பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர் அவர்களை கண்டித்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தண்டித்ததால் மாணவன் மரணம்: தோப்புக்கரணம் போடும்போது மயங்கி விழுந்தான்
Published on

ஜாஜ்பூர்:

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஓரலி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ருத்ர நாராயண் சேத்தி என்ற மாணவன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் தனது நண்பர்கள் 4 பேருடன் ருத்ர நாராயண் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் விளையாடியதற்கு தண்டனையாக மாணவர்களை தோப்புக் கரணம் போட சொல்லி உள்ளார்.

இதையடுத்து தோப்புக் கரணம் போட்டுக் கொண்டிருந்தபோது மாணவன் ருத்ர நாராயண் திடீரென மயங்கி கீழே விழுந்தான். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த பெற்றோர் மாணவன் ருத்ர நாராயணை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாணவன் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com