டெல்லியில் கொடூர செயல்- 87 வயது மூதாட்டியை வீடு புகுந்து கற்பழித்த மர்ம ஆசாமி

டெல்லியில் 87 வயது மூதாட்டியை வீடு புகுந்து மர்மநபர் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

மேற்கு டெல்லியில் உள்ள திலக் நகரில் 87 வயதான மூதாட்டி தனது 65 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

முதுமை மற்றும் நோய் பாதிப்பு காரணமாக அந்த மூதாட்டி வீட்டில் படுக்கையில் ஓய்வில் உள்ளார்.

நேற்று முன்தினம் மூதாட்டியின் மகள், தனது தோழி ஒருவரை பார்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது வீட்டில் மூதாட்டி மட்டும் தனிமையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். வீட்டை உள்பக்கம் பூட்டிய அவரிடம் மூதாட்டி, யார் என்று கேட்டார். அதற்கு அந்த நபர், தான் ‘கியாஸ் ஏஜென்சி’யில் இருந்து வருவதாக கூறினான்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்க கூச்சல் போட்டார். இதனால் அந்த ஆசாமி மூதாட்டியை தாக்கினார். பின்னர் அவர் மூதாட்டி என்றும் பார்க்காமல் அவரை கற்பழித்தார். பின்னர் அங்கிருந்த செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் வீடு திரும்பிய மூதாட்டியின் மகள், தனது தாய் காயத்துடன் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தாயிடம் விசாரித்தபோது நடந்த கொடூர செயலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேற்கு டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இந்த வழக்கை வெறும் திருட்டு வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளதாக மூதாட்டியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினார்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முதலில் திருட்டு வழக்காகத்தான் புகார் செய்தனர். எனவே திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் பாலியல் வன்கொடுமை என்று கூறி இருப்பதால் சில சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு சேர்க்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில், ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com