பணம் பறிமுதல்
பணம் பறிமுதல்

5 மாநில தேர்தல் ரூ. 1000 கோடி மதிப்பிலான மது- பணம், இலவச பொருட்கள் பறிமுதல்

பஞ்சாபில் அதிகபட்சமாக 510.91 கோடி, அதையடுத்து உத்தரபிரதேசத்தில் 307.92 கோடி, மணிப்பூரில் 161.83 கோடி, உத்தரகாண்டில் 18.81 கோடி, கோவாவில் 12.73 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தையும் கைப்பற்றி உள்ளனர்.
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரபிர தேசத்தில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன.

மீதமுள்ள தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மணிப்பூரில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த 5 மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம், மது, இலவச பொருட்களை வாரி வழங்கி வருகின்றன.

இதை கட்டுப்படுத்த தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனையில் 5 மாநிலத்திலும் இதுவரை மொத்தம் ஆயிரத்து 18 கோடி மதிப்பிலான மது, இலவச பொருட்கள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபில் அதிகபட்சமாக 510.91 கோடி, அதையடுத்து உத்தரபிரதேசத்தில் 307.92 கோடி, மணிப்பூரில் 161.83 கோடி, உத்தரகாண்டில் 18.81 கோடி, கோவாவில் 12.73 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

மொத்தம் 140.29 கோடி ரூபாயும், 99.84 கோடி மதிப்பிலான 82 லட்சம் லிட்டர் மது வகைகளும், 569.52 கோடி மதிப்பிலான போதை பொருட்களும், 93.5 கோடி மதிப்பிலான இலவச பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த மாநிலங்களில் கைப்பற்றப்பட்டதை விட இது சுமார் 4 மடங்கு அதிகம் ஆகும். கடந்த தேர்தலின் போது 299.84 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com