

புது டெல்லி:
பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பான நிலை அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை எதுவும் கேட்காமல் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும் ரேஷன் பொருட்களை அடையாள அட்டை இல்லாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.