பிரதமர் மோடி திருப்பதி வருகை: பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உளவுத்துறை டி.எஸ்.பி. திடீர் மரணம்

பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி திருப்பதி வருகை: பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உளவுத்துறை டி.எஸ்.பி. திடீர் மரணம்
Published on

திருப்பதி:

பிரதமர் மோடி நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக இன்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி திருமலைக்கு வருகிறார். திருமலையில் உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து ரேணிகுண்டா விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மத்திய, மாநில உளவுத்துறை போலீசார், மதிய பாதுகாப்பு படை போலீசார் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

மேலும் பிரதமர் மோடி தங்க உள்ள வி.ஐ.பி விருந்தினர் மாளிகை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையல் ஆந்திர மாநிலம், விஜயவாடா, பொரங்கியை சேர்ந்தவர் கிருபாகர். இவர் மத்திய உளவுத்துறை பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பியாக வேலை செய்து வந்தார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மற்ற போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com