'முடா' நில முறைகேடு- 14 மனைகளை திருப்பித் தரும் சித்தராமையா மனைவி

மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சித்தராமையா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
'முடா' நில முறைகேடு- 14 மனைகளை திருப்பித் தரும் சித்தராமையா மனைவி
Published on

கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து முதலமைச்சர் சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சித்தராமையா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கை சித்தராமையா மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தால் பெறப்பட்ட 14 மனைகளை திரும்ப ஒப்படைக்க தயாராக உள்ளதாக கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com